வறட்சியை போக்க புதிய திட்டம் : செயற்கை மழையினை உருவாக்கும் சீனா
சீனாவில் கடும் வெய்யில் வாட்டி வருவதால், செயற்கை மழையை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது
கடும் வெப்பத்தில் சீனா
சீனாவில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வெப்ப நிலையானது அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலையானது கடந்த 61 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதிகமாக பதிவாகியுள்ளதாக சீன அரசாங்கம் கூறியுள்ளது.

இதனால் நீா்மட்டத்தின் அளவானது பாதியாக குறைந்துவிட்டது. அங்குள்ள "சிச்சுவான்" மாகாணத்தில் சென்ற வாரம் வெப்பநிலையானது 45 டிகிரி செல்சியஸை கடந்ததால், வீடுகளில் குளிா்சாதன இயந்திரங்களின் தேவை அதிகரித்துள்ளது.
செயற்கை மழை உருவாக்கம்
நெற்பயிர்களின் சேதத்தை குறைக்க அடுத்த 10 நாட்களில் அந்நாட்டின் தென்பகுதியில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வேளாண் துறை மந்திரி தாங் ரெஞ்சியன் கூறியதாக குளோபல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்திக்குறிப்பில் 'சீனாவின் ஆண்டு மொத்த உற்பத்தியில் இலையுதிா் கால அறுவடை 75 சதவீதம் பங்கு வகிப்பதால், எவ்வித சேதமும் ஏற்படாதவாறு அறுவடையை உறுதிப்படுத்த அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றனா்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகவிதைப்பு திட்டம்
இந்நிலையில் சீனாவில் வெப்பநிலையை குறைப்பதற்காகவும் நெற்பயிர்களை காப்பதற்காகவும் செயற்கை மழையை பெய்ய வைக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த செயல்முறையானது மேகத்தில் ரசாயனத்தை தூவிய பின்னர் செயற்கை மழையை பெய்ய வைப்பார்கள் .

இதற்கு மேக விதைப்பு திட்டம் என்ற பெயர், இந்த திட்டத்தை செயல்படுத்த வேளாண் அமைச்சகம் அதிகாரப்பூா்வ அறிவிப்பை தனது வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அதே சமயம் இந்த செயற்கை மழை பொழிவு சீனாவில் எந்த இடத்தில் நடைபெறும் என்ற தகவல் குறித்து அந்த வலைதளப் பதிவில் குறிப்பிடவில்லை.