தைவானை சுற்றி சீன ராணுவம் போர் ஒத்திகை : மூன்றாம் உலக போருக்கு வாய்ப்பா ?
சீனாவின் எதிர்ப்பினை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சுற்றுபயணம் சென்றது , உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது ஒரு வேளை இது அமெரிக்காவும் சீனாவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சீனா தைவான் எல்லை விவாகாரம்
தென் சீனக் கடலில் தனி தீவாக உள்ளது தைவான், இந்த பகுதி தங்களுக்கு உட்பட்ட பகுதி என சீனா கூறிவருகிறது.தைவானுடன் எந்த நாடும் அதிகாரப்பூவ உறவினை வைத்துக்கொண்டால் அதற்கு முட்டுகட்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளது சீனா.தைவானை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்கா கூறி வருகிறது.
நெருப்புடன் விளையாட வேண்டாம்
இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் ஜோபைடனும் கடந்த வாரம் தொலைபேசியில் பேசிய போது தைவானின் அமைதியினை சீர்குலைக்கும் வகையில் சீனா செயல்படவேண்டாம் என ஜோபைடன் கூறினார்.
அதற்கு பதில் கூறிய சீன அதிபர் தைவானின் அரசியல் விவகாரங்களில் வெளிநாட்டினர் மூக்கை நுழைப்பதை சீனா எதிர்ப்பதாகவும் நெருப்புடன் விளையாடுபவர்கள் அதனால் அழிக்கப்படுவார்கள் எனக் கூறினார்.
அமெரிக்கா ஆதரவு
இந்த பதட்டமான சூழ்நிலையில் தான் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சிபெலோசி நேற்று ஒரு நாள் பயணமாக தைவான் வந்தார். அமெரிக்க அதிபருக்கு அடுத்த நிலையில் உயர் பதவியில் உள்ள அந்நாட்டு சபாநாயகர், தைவான் வந்தது, கடந்த 25 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.
அப்போது தைவானில் பேசிய நான்சி பெலோசி தைவானின் ஜனநாயக உரிமைக்கு அமெரிக்கா இரும்பு கவசம் போல் துணைநிற்கும் என கூறினார். அமெரிக்காவின் இந்த பேச்சு கேலிகூத்தானது என்றும் சீனாவின் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூறினார்.
ஜனநாயகம் என்ற போர்வையில் சீனாவின் இறையாண்மையை அமெரிக்கா மீறிவிட்டது. சீனாவை அவமதிப்பவர்கள் தண்டிக்கப்படுவர் என்றார். இந்த நிலையில் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தையொட்டி, தைவான் கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் கடந்த 2 நாட்களாக சுற்றி வருகின்றன.
அதேநேரத்தில் சீன போர்க்கப்பல்களும் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளன. இதுபற்றி சீன ராணுவம் கூறும்போது,நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். நான்சி பெலோசியின் பயணத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்குவோம்.
தைவானில் போர் பதற்றம்
இது சீனாவின் இறையாண்மையை பாதுகாக்கும் அவசியமான நடவடிக்கை என தெரிவித்துள்ளது. அதற்கேற்ப தைவானைச் சுற்றி 5 நாள் போர் பயிற்சியில் ஈடுபடப் போவதாக சீனா அறிவித்து, போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளது. தைவான் வான் எல்லைக்குள் சீனாவின் 27 போர் விமானங்கள் நேற்று முன்தினம் அனுமதியின்றி பறந்து சென்றன
சீனாவின் இந்த நடவடிக்கை, முக்கிய துறைமுகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
அமெரிக்க போர்க்கப்பல்கள் தைவான் கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு சீனாவின் போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் சென்றுள்ளது இரு நாடுகள் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா ஊடுருவியதுபோல், தைவானில் சீனா எந்நேரமும் ஊடுருவி கைப்பற்றலாம் என கூறப்படுகிறது