சீனாவில் என்ன நடக்கிறது? கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவதை நிறுத்தியது அரசு
சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அரசு கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது.
ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேர் உயிரிழப்பு
சீனாவில் கடந்த 3 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டில் கொரோனா தொற்று என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது.

புதிய வகை உருமாறிய கொரோனா பிஎப்7 பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுகிறது என்ற உண்மையான தகவல்களை அரசு வெளியிடுவதில்லை என பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் நாள்தோறும் ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர்பினிட்டி என்ற லண்டனை சேர்ந்த சுகாதார தரவு நிறுவனம் சீனாவில் ஒரு நாளைக்கு சுமார் 5 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நிலையில் அந்நாட்டு அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
திடீர் மாற்றம்
இந்த நிலையில் சீனாவில் இதுவரை தினம்தோறும் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வந்த அந்நாட்டின் தேசிய சுகாதார மையம் இனி கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட மாட்டோம் என நேற்று அறிவித்துள்ளது.
இனி கொரோனா பாதிப்பு விவரங்களை சீனா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.