ரீல்ஸ் எடுப்பதற்காக கொலை செய்த சிறுவர்கள் - திருமணத்திற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்
ரீல்ஸ் எடுப்பதற்காக இளைஞரை கொலை செய்த சிறுவர்கள், அவரது ஐபோனை பறிமுதல் செய்துள்ளனர்.
திருமணத்திற்கு வந்த இளைஞர் கொலை
உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான ஷாதாப் என்பவர் பெங்களூருவில் வசித்து வந்தார்.
சமீபத்தில், தனது தாய் மாமாவின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவர் தனது சொந்த ஊருக்கு வருகை தந்தார். இந்நிலையில், திருமணத்திற்கு மறுநாள் இருந்து ஷாதாப்பை காணவில்லை.
இதனையடுத்து, காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கிராமத்திற்கு வெளியே உள்ள கொய்யா பழத்தோட்டத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றுக்கு அருகில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவரது தொண்டை கத்தியால் அறுக்கப்பட்டு, தலை கல்லால் சிதைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, இந்த குற்றத்தில் ஈடுபட்ட14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சிறுவர்கள் கைது
அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறப்பான ரீல்ஸ் எடுப்பதற்கு உயர் தரத்திலான போன் தேவைப்பட்டது. அதற்காக இவரை கொலை செய்து, அவரின் ஐபோனை கைப்பற்றினோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.
திருமணத்தன்று இரவில், வீடியோ எடுப்பதாகக் கூறி, அவரை தனியாக அழைத்த சிறுவர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். மேலும், இதற்காக 4 நாட்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டதாக தெரிவித்தனர்.
அந்த சிறுவர்களிடமிருந்து ஐபோன் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கொலைக்கான ஆதாரத்தை மறைத்ததாக சிறுவனின் உறவினர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் தேடப்பட்டு வருகிறார்.