சிறுமி பலாத்கார வழக்கில் போக்ஸோ சட்டத்தில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மயிலாடுதுறையில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைப்பு.
மயிலாடுதுறையில் சமையல் வேலை பார்த்து வரும் ஈஸ்வரன்(34) அவரது மனைவி மற்றும் 7-ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து, சிறுமியிடம் அவர் தாய் விசாரித்ததில், ஈஸ்வரன் 2 மாதங்களுக்கு மேலாக சிறுமியின் தாய் வேலைக்கு சென்ற பிறகு, சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிந்து, ஈஸ்வரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஈஸ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, நாகப்பட்டினம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஈஸ்வரன் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.