10க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள்…அடுத்தடுத்து சிக்கும் தீட்சிதர்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்

Tamil Nadu Police
By Thahir Oct 05, 2022 01:53 PM GMT
Report

10க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் சட்டவிரோத குழந்தை திருமணம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத குழந்தை திருமணம்

சிதம்பரம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் சோமசெகர் தீட்சிதர்.இவர் நடராஜர் கோவில் தீட்சிதர்களில் ஒருவர். இவரது 14 வயது மகள் தற்போது 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது நடராஜர் கோவில் தீட்சிதர், இந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து கடலுார் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழுவினர் மற்றும் கடலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து திருமணமான சிறுமி, அவரது தந்தை ஆகியோரை கடலுாருக்கு அழைத்துச் சென்று சமூக நலத்துறை அலுவலர்கள் முன்னிலையில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறுமி தனக்கு திருமணம் நடந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சமூக நலத்துறையின் மகளிர் ஊர் நல அலுவலர் தவமணி கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

10க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள்…அடுத்தடுத்து சிக்கும் தீட்சிதர்கள் - வெளியான அதிர்ச்சி தகவல் | Child Marriages Dikshitras Getting Caught In A Row

இதையடுத்து சிறுமியின் தந்தை சோமசேகர் தீட்சிதர் (41), சிறுமியை திருமணம் செய்த பசுபதி தீட்சிதர் (24) மற்றும் அவரது தந்தை கணபதி தீட்சிதர் 942) ஆகியோரை கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

அடுத்தடுத்து கைதாகும் தீட்சிதர்கள் 

இந்த நிலையில், தீட்சிதர்கள் மேலும் ஒரு குழந்தை திருமணத்தை நடத்தி வைத்தது அம்பலமாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13 வயது சிறுமிக்கு 19 வயது தீட்சிதரை திருமணம் செய்து கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சமூக நலத்துறை அதிகாரி சித்ரா அளித்த புகாரின் பேரில் பத்ரீசன் எனும் தீட்சிதர், அவரது தந்தை ரத்தினம், மணமகனின் சகோதரர் சூர்யா, சிறுமியின் தந்தை ராஜகணேஷ் தீட்சிதர், தாய் தங்கம்மாள் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் சூர்யா, தங்கம்மாளை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான மற்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதே போல், 10க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களை தீட்சிதர்கள் செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தை திருமண விவகாரத்தில் அடுத்தடுத்து தீட்சிதர்கள் சிக்குவதால் சிதம்பரம் நடராஜர் கோவில் மட்டும் இன்றி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.