அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை குறித்து தொலைபேசியில் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியை மூத்த அமைச்சர் நேரில் சந்தித்து ஆலேசானை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத்துறை சோதனை
அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (ஜுலை 17) காலை 7 மணிக்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் சிகாமணி எம்.பி ஆகியோருக்கு சொந்தமான சென்னை மற்றும் விழுப்புரம் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் பொன்முடியிடம் 7 பேர் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இரவு 8 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தனி அறையில் வைத்து 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அமைச்சர்கள் ஆலோசனை
இதையடுத்து அதிகாலை 3 மணிக்கு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் திமுக மூத்த அமைச்சர்களான துரைமுருகன்,
ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, ரகுபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அ.ராசா மற்றும் திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கேவும் அமைச்சர் பொன்முடியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சர் ஆறுதல்
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணை குறித்து கேட்டறிந்தார்.
எதற்கும் அஞ்ச வேண்டாம்..சட்டபடி நாம் பார்த்துக்கொள்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பொன்முடிக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.