தனது குடும்பத்தினருடன் காவலர் குடியிருப்பில் பொங்கல் வைத்து கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை கொண்டித்தோப்பில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில், குடும்பத்தினருடன் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
பொங்கல் வைத்து கொண்டாடிய முதலமைச்சர்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தனது குடும்பத்தினருடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொண்டித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் பொங்கல் பண்டிகையை இன்று உற்சாகமாக கொண்டாடினார்.

இந்த நிகழ்வில் காவலர் குடியிருப்பில் உள்ள காவல்துறையினரும் தங்கள் குடும்பத்தினர் சகிதமாக கலந்துகொண்டனர். இந்த உற்சாகமான நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா ஆகியோர் கலந்துகொண்டர்.
மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம்
பொங்கல் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறையின் தலைவர் சைலேந்திர பாபு மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
காவலர் குடியிருப்பில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வெயில் மழை பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம்!” என தெரிவித்துள்ளார்.
வெயில் மழை பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன்.
— M.K.Stalin (@mkstalin) January 15, 2023
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம்!#தமிழ்நாடு_வாழ்க pic.twitter.com/OFy1Zd8tku