’எதிரிகளின் கனவு பலிக்காது' பாஜக உடன் கூட்டணி பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி பதில்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. வேட்பாளர் பட்டியல் தொடங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் மும்முரமாக பணி செய்து வருகின்றன. பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறது ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில், ‘ஒரு போதும் நான் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன்’ என அதிரடியாக பேசியிருந்தார்.
அவரது மறைவுக்கு பிறகு, அதிமுக பாஜக பக்கம் சாய்ந்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே மத்திய அரசுடன் அதிமுக இணக்கம் காட்டுவதாக எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு மத்தியிலே நான்கு ஆண்டுகள் ஆட்சி முடிந்துவிட்டன. இந்த நிலையில் பிரபல செய்தி நிறுவனத்துக்கு முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டியில், அதிமுகவை வைத்து ஆட்சியைப் பிடிக்க பாஜக நினைக்கிறது என சொல்வது முற்றிலும் தவறு.
பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் சரி! அதிமுக கூட்டணி வைத்தால் தவறு என சொல்வதா?. தேர்தலுக்காக மட்டுமே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. சித்தாந்த அடிப்படையில் அல்ல. மத்தியில் உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்தால் தான் மாநிலத்தில் பல நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்று கூறியிருக்கிறார்.
மேலும், அதிமுகவில் நான் பயணித்த காலம் கடினமான காலம் என உணர்ச்சிவசத்துடன் பேசிய முதல்வர், அதிமுகவை அழிக்க நினைக்கும் எதிரிகளின் கனவு பலிக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.