பிசிசிஐயில் இருந்து விலகிய முக்கிய நபர் - இந்திய போட்டிகள் நடத்துவதில் சிக்கல்
பிசிசிஐயில் இருந்து முக்கிய நபர் தனது பதவியை ராஜினாமா செய்ததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடந்த ஒரு மாதமாகவே போதாத காலமாக உள்ளது கேப்டன் பதவி நீக்கம், ஐபிஎல் புதிய அணிகளுக்கு சிக்கல், பழைய அணிகளின் புகார் என பல பிரச்சினைகளை அடுத்தடுத்து சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், பிசிசிஐயில் 9 வருடமாக பணிபுரிந்த முக்கிய நிர்வாகி தனது பதவியை ராஜினாமா செய்தார். இது பிசிசிஐக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பிசிசிஐயின் தலைமை மருத்துவராக இருந்தவர் அபஜித் சால்வி கடந்த 9 வருடமாக பணிபுரிந்து வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பு மருத்துவராக பல வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கும் செல்வார். தற்போது கொரோனா அதிகம் உள்ள தென்னாப்பிரிக்கா தொடருக்கு அபஜித் சால்வி செல்லவில்லை.
இதனிடையே நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்று ஏற்பாடாக வேறொரு மருத்துவமரை பிசிசிஐ அனுப்பியுள்ளது.
16 வயதுக்குட்பட்டவர்களுக்காக பிசிசிஐ நடத்தும் விஜய் மெர்சண்ட் கோப்பை, இந்திய கிரிக்கெட்டில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் சிறப்பாக செயல்படுபவர்களே அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள். இதனால் வீரர்களின் வயதை , அவர்களது எலும்புகளின் அடர்த்தியை வைத்து ஆய்வு செய்து வயது தகுதிச் சான்றிதழ் அளிக்கும் முக்கிய பொறுப்பையும் சால்வி செய்து வந்தார்.
மேலும் கொரோனா காலத்தில் வீரர்களுக்கான பயோ பபுள் முறையை உருவாக்கியது. வீரர்களுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தி முடிவுகளை கூறவது, எந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என வீரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது என பல பணிகளை சாலவி மேற்கொண்டார். தற்போது சால்விக்கு பதில் வேறு மருத்துவர் இல்லாததால் பிசிசிஐ அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளது.