சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு செய்வதில் தீண்டாமையா? - என்ன நடந்தது ?
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உலக புகழ் பெற்ற நடராஜர் ஆலயம் உள்ளது. இந்த கோயில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்த கோவிலை தீட்சிதர்களே நிர்வகித்து பூஜை செய்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கோயிலில் மேல் உள்ள சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் உள்ளிட்ட யாரும் சாமி தரிசனம் செய்யக் கூடாது என தீட்சிதர்கள் கட்டுப்பாடு விதித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டை சேர்ந்த ஜெயசீலா (37) என்பவர் நடராஜரை தரிசனம் செய்ய கனகசபைக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு இருந்த சில தீட்சிதர்கள் ஜெயசீலாவை கடுமையாக திட்டி, தாக்கி வெளியே அனுப்பி வைத்து உள்ளனர்,
இதுகுறித்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் , இந்த சம்பவம் தொடர்பாக ஜெயசீலா சிதம்பரம் நகர காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் சிதம்பரம் காவல் துறையினர் புகாரின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர்
இதே போல் சக்திகணேஷ் தீட்சிதர் நேற்று முன்தினம் இரவு சிற்றம்பல மேடையில் (கனகசபை) ஏற சென்றார். அப்போது சிலர் அவரை தாக்கி, தள்ளிவிட்டுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை ந்டத்தி வருகின்றனர்.