அனல் பறக்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் - திருப்பூர் இன்று மோதல்
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கிய தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நடக்கும் 2வது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் என்.ஜெகதீசன், சோனு யாதவ், அலெக்சாண்டர், சித்தார்த் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர். அதேபோல் எம்.முகமது தலைமையில் பெயர் மாற்றத்துடன் களம் காணும் திருப்பூர் தமிழன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிக்கு வர்ணனையாளராக பணியாற்றுவதால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.