சென்னையில் தயாரிப்பாளர் கொடூரக் கொலை... - உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மர்ம நபர்களில் ஒருவர் கைது
சென்னையில் திரைப்படத் தயாரிப்பாளர் பாஸ்கரன், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் பாஸ்கரன்
சென்னை, ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (67). இவருடைய மனைவி பாக்கியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாஸ்கரன் 1997ம் ஆண்டு ராம்கி நடிப்பில் வெளியான ‘சாம்ராட்’ உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இவர் கட்டுமானத் தொழிலையும் செய்து வந்தார்.
போலீசார் வழக்குப்பதிவு
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது வீட்டிற்கு போன் செய்த பாஸ்கரன் நிகழ்ச்சி முடித்து வீட்டுக்கு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் பாஸ்கரன் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப். இதனால், பதறிப்போன குடும்பத்தினர் ஆதம்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தனர். உடனே, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பாஸ்கரனை தேட ஆரம்பித்தனர்.
பிளாஸ்டிக் பையில் கிடந்த ஆண் சடலம்
இதனையடுத்து, நேற்று காலை சின்மயா நகர் பகுதியில் கூவம் ஆற்றின் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடலில் ரத்த காயங்களுடன் கருப்பு நிற பிளாஸ்டிக் பையால் முழுமையாக மூடப்பட்ட ஆண் சடலம் கிடப்பதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, சின்மயா நகர் பகுதியில் உள்ள கூவ ஆற்றிற்கு போலீசார் விரைந்து சென்றனர்.கொலை செய்யப்பட்ட உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த ஆண் சடலம் ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பது தெரியவந்தது. பாஸ்கரன் தொழில் போட்டி, முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்று பல்வேறு கோணத்தில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 3 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
ஒருவர் கைது
இந்நிலையில், இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட விருகம்பாக்கத்தை சேர்ந்த கணேசன் என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். போலீசாரிடம் குற்றவாளி கணேசன் கொடுத்த வாக்குமூலத்தில், தயாரிப்பாளர் பாஸ்கரனை இரும்பு ராடால் அடித்து கொன்றதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.