மும்பை அணிக்கு பயம் காட்டிய பந்துவீச்சாளர்கள் - மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்
திணறிய மும்பை இந்தியன்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்ற 12-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு 7:30 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதன்படி களமிறங்கிய மும்பை அணி துவக்கத்தில் அதிரடியாக விளையாடியது. ஆனால் அது வெகுநேரம் நிலைக்கவில்லை.
மும்பை அணி 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா 21(13) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன் பிறகு ரவீந்திர ஜடேஜாவின் அசத்தலான பந்துவீச்சில் இஷான் கிஷன் 32(21) , கேமரூன் க்ரீன் 12 (11) மற்றும் திலக் வர்மா 22 (18) ஆகியோர் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.
மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்களும், துஷார் தேஷ்பாண்டே மற்றும் மிட்சேல் சான்ட்னர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி வெற்றி
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் டெவன் கான்வே(0) முதல் ஓவரில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
அதன்பின் இறங்கிய ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 2023 ஐபிஎல் தொடரின் அதிவேக அரைசதமடித்தார். 19 பந்துகளில் அரைசதமடித்த ரஹானே 61 ரன்களில் சாவ்லா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய துபே 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ருதுராஜ்(40 ரன்கள்) அவ்வப்போது பவுண்டரிகள் விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.
முடிவில் சென்னை அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியது.