ஊரடங்கை மீறுபவர்களை பிடிக்க ட்ரோன் வருகிறது - சென்னை காவல்துறை அதிரடி
டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க காவல் ஆணையர் ஏற்பாடு. தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் வாகனத் தணிக்கை மூலம் விதிமுறைகளை மீறி சுற்றுபவர்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.
மேலும் சில இடங்களில் தனிநபர்கள் தன்னிச்சையாக சுற்றுவது குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாமல் குழுமமாக அமர்வது இருசக்கர வாகனங்களில் சுற்றிவருவது இவற்றையெல்லாம் கண்காணிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால் அவர்கள் உத்தரவின்பேரில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வீடியோ பதிவுகளை வைத்து பொறுப்பு அதிகாரிகளின் தகவல் பரிமாற்றம் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காமராஜர் சாலையில் காந்தி சிலை சந்திப்பு அருகில் தென் சென்னை கூடுதல் காவல் ஆணையாளர் மருத்துவர் திரு. கண்ணன். இணை ஆணையர் கிழக்கு மண்டலம் திரு.வே.பாலகிருஷ்ணன் மயிலாப்பூர் துணை ஆணையர் பொறுப்பு திரு சாம்சன் மற்றும் அதிகாரிகள் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்படும் பணியை பார்வையிட்டார்கள்.