கடலில் முழ்க போகும் சென்னை, கொல்கத்தா - இந்தியாவை நெருங்கும் பேராபத்து...ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
பருவநிலை மாற்றங்களால் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு பேராபத்து காத்திருப்பதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பேராபத்தில் இந்தியா?
இதுகுறித்து நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்ற பத்திரிகையில் விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கை முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேசிய வளிமண்டல ஆய்வு மையத்தின் விஞ்ஞானியான ஐக்சூ ஹு என்பவர் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், நடப்பு நுாற்றாண்டில் பசுமை இல்ல வாயுகள் வெளியேற்றம் அதிக விகிதத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனால் 2100 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆசியாவின் பல பெரிய நகரங்கள் பேரிடரை எதிர்கொள்ளும் பேராபத்தில் உள்ளன என கண்டறியபட்டு உள்ளது.
இந்த அறிக்கையின் படி, இந்தியாவின் இரு முக்கியமான நகரங்களான சென்னை மற்றும் கொல்கத்தா, யாங்கூன், பேங்காக், ஹோ சி மின் சிட்டி மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலபா நகரம் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆய்வு அறிக்கை ஒன்றில் தமிழக பகுதிகளுக்கு ஏற்பட போகும் பேராபத்து பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது.
கடலில் முழ்கப் போகும் நகரங்கள்
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் கீழ் பருவநிலை மாற்றம் தமிழக செயல்திட்டம் என்ற அமைப்பு செயல்படுகிறது. பருவநிலை மற்றும் உலக வெப்பமயமாதல் ஆகியவற்றால் தமிழகத்திற்கு ஏற்படும் விளைவுகள் பற்றி நடந்த ஆய்வில், உலக வெப்பமயம் அதிகரிப்பினால், அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி, அதனால் 2050-ல் கடல் மட்டம் 4.8 மீட்டர் அளவிற்கு உயரும் என்று தெரிய வந்துள்ளது.
அதேபோல கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதனால் கடல் நீர்மட்டம் 3.4 மீட்டர் உயரம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
இதன் காரணமாக உலகம் முழுவதுமே கடல் நீர்மட்டம் உயர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் தமிழகத்தில் என்ன பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு செய்ததில் 2050-ம் ஆண்டில் தமிழக கடலோர பகுதியில் 4.35 மீட்டரில் இருந்து 6.85 மீட்டர் வரை நீர்மட்டம் உயரும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் சுமார் 1963 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு பகுதிகளை கடல் விழுங்கி விடும்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 144 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கடற்பகுதிக்குள் சென்று விடும். இதனால் இந்த பகுதியில் வாழும் 10 லட்சம் மக்கள் வாழ்விடத்தை இழந்து வெளியேற வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்.
அதோடு காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சம் பேர் வெளியேறும் நிலை உருவாகும். தமிழகத்தில் உள்நாட்டு உற்பத்தி விகிதம் கடந்த ஆண்டு கணக்கீட்டின்படி ரூ.12 லட்சத்து 12 ஆயிரம் கோடி ஆகும்.
நிலப்பரப்பை கடல் விழுங்குவதால் இதில் 50-ல் இருந்து 55 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.