ஊழியர்களுக்கு BMW காரை பரிசாக வழங்கி இன்பதிர்ச்சி கொடுத்த சென்னை ஐ.டி நிறுவனம்
சென்னையை சேர்ந்த ஐ.டி நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர், 10 வருடங்களுக்கும் மேலாக தன்னுடன் பணியாற்றிய 5 ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான காரை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சென்னை ஓ.எம்.ஆர் சாலை கந்தன்சாவடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கிஸ்ஃப்ளோ என்ற ஐ.டி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதன் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம் முயற்சியில் இந்தியாவில் வருவாய் மற்றும் பிராஜெக்ட் அடிப்படையில் 10-வது இடத்தில் இந்த நிறுவனம் இருப்பதாக கூறப்படும் நிலையில் கிஸ்ஃப்ளோ நிறுவனம் துவங்கி நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதனை கொண்டாடும் வகையில் அனைத்து சூழ்நிலையிலும் தன்னுடன் ஒன்றாக பயணித்த தினேஷ் வரதராஜன், கௌஷிக்ராம், விவேக், பிரசன்னா, ஆதி ராமனாதன் ஆகியோருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 5 சீரிஸ் பி.எம்.டபிள்யூ சொகுசு காரை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சுரேஷ்.
இதற்காக சர்பிரைஸ் கெட்-டு-கெதர் பார்ட்டியை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் சி.இ.ஓ சுரேஷ் 5 ஊழியர்களின் குடும்பங்களையும் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பின்னர் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஊழியர்களின் உழைப்பையும் நேர்மையையும் பாராட்டும் விதமாக கார்களை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இது குறித்து கிஸ்ஃப்ளோ சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம் பேசுகையில், “இந்த நிறுவனம் துவங்கியது முதல் தற்போது வரை என்னோடு பயணித்து வரும் ஊழியர்கள் எந்த சூழ்நிலையிலும், அதிக ஊதியம் தருவதாக கூறியும் என்னை விட்டு செல்லாமல் தொடர்ந்து உழைத்தனர்.
அதற்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களை குடும்பதோடு கெட் டு கெதர் பார்ட்டி இருப்பதாக வரவழைத்து அவர்களுக்கு கார் பரிசாக வழங்கி இருக்கிறோம். இதன் மதிப்பு சுமார் 1 கோடி” என தெரிவித்தார்.