ஐயா... என் கணவரை என்கவுன்ட்டர் பண்ண போறாங்க... காப்பாத்துங்க... -நீதிமன்றத்தில் கதறிய பிரபல ரவுடி மனைவி
காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, நிறுவனங்களை மிரட்டுவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ரவுடி படப்பை குணா போலீசாரால் என்கவுன்டர் செய்யப்படலாம் எனக் கூறி அவரது மனைவி எல்லம்மாள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்திருக்கிறது.
ரவுடி படப்பை குணா மீது கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குணா தலைமறைவாகி உள்ளார்.
அவரை போலீசார் கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, தேடி வருகிறார்கள்.
இந்நிலையில், ரவுடி படப்பை குணாவின் மனைவி எல்லாம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சுயேட்சையாக எனது கணவர் வெற்றி பெற்றது முதல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மூலம் மிரட்டல்கள் வருகிறது.
நிலுவையில் உள்ள வழக்குகளில் தனது கணவர் சரணடைய தயாராக உள்ளார். இந்நிலையில், புறநகர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரியால் என்கவுன்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்திருக்கிறது. எனவே, தனது கணவர் குணாவை என்கவுன்டர் செய்யக்கூடாது என்று அரசு மற்றும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் அச்சப்படும் வகையில் என்கவுன்டர் திட்டம் எதுவும் கிடையாது என்றும், சரணடைந்தால் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என்றும் காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் அனுமானம் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் தொடரபட்ட வழக்கு எனக் கூறி, எல்லாமாளின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.