சென்னையில் இலவச WiFi வசதி - அதிரடி அறிவிப்பால் மகிழ்ச்சி
சென்னையில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மொத்தம் 50 இடங்களை தேர்வு செய்து அதில் தற்போதைக்கு 46 இடங்களில் WI-FI ஸ்மார்ட் கம்பங்கள் நடப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது சென்னை மெரினா (Chennai Marina)கடற்கரை, அசோக்பில்லர், நடேசன் பூங்கா, தி.நகர் உள்ளிட்ட 46 இடங்களில் WI-FI கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் 30 நிமிடங்களுக்கு இலவச WI-FI (Free WIFI) ஐ மக்கள் பயன்படுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதன் முக்கிய நோக்கம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள திட்டப் பணிகளை ஒருங்கிணைத்து நிர்வாகச் செயல்திறனை மேம்படுத்துவதே ஆகும்.
இந்த திட்டத்தில் சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் 49 எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கம்பங்களில் உள்ள வைஃபை தொடர்பை பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் இலவச வைஃபை பெறுவதற்கு கைப்பேசி எண்ணைப் பதிவு செய்து ஓடிபி மூலம் இச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பொதுமக்கள் இலவச வைஃபை இணைப்பு அமைக்கப்பட்டுள்ள 49 ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf இணையதள இணைப்பைப் பயன்படுத்தித் தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.