சென்னையில் குறையும் கொரோனா: மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு
கொரோனோ பரவல் குறைந்துள்ள நிலையில் சென்னை முழுவதும் குருதி சார் அளவீடு ஆய்வுக்காக திங்கட்கிழமை முதல் மாதிரிகள் சேகரிக்கப்படும் என சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து தற்போது நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 300 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் சதவீதம் 0.88% ஆக உள்ளது.
இந்தநிலையில், பொதுமக்களிடம் கொரோனோவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதா என்பதை கண்டறிய Sero survey எனப்படும் குருதி சார் அளவீடு ஆய்வுக்காக வரும் திங்கட்கிழமை முதல் மாதிரிகள் சேகரிக்க சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே ICMR வழிகாட்டு நெறிமுறைகள் படி சென்னை மாநகராட்சியின் சார்பில் இரண்டு கட்டங்களாக SERO சர்வே கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. கொரோனா இரண்டாம் அலையையொட்டி, தற்போது ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஆய்வின்படி எந்தெந்த பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என கண்டறிந்து நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை அந்த பகுதியில் தீவிரப்படுத்த முடியும் எனவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.