செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்பு
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. இந்த ஏரி தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையால் வேகமாக நிரம்பி வருகிறது. இதன் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடி நீரில் தற்போது 2,942 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
அதேபோல் 24 அடி நீர்மட்ட உயரத்தில் 21.33 அடி உயர்ந்துள்ளது. இந்த ஏரிக்கு நேற்று வினாடிக்கு 2095 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில் மழை குறைந்ததால் இன்று காலை 700 கன அடியாக குறைந்தது. ஆனால் இன்று காலை முதல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்தை அதிகரிக்கும் பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெருமந்தூர் மற்றும் நேமம் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த ஏரிகள் நிரம்பினால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 5 ஆயிரத்திற்கு மேல் நீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே செம்பரம்பாக்கம் ஏரியை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து குறைந்து இருந்தாலும் நேற்று மாலை முதல் தற்போது வரை வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்தால் உபரி நீர் வெளியேற்றமும் அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.