இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் #Cheer4India - பொதுமக்கள் ஆர்வம்
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் #Cheer4India என்கிற செல்பி தளம் மதுரை ரயில்நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் டோக்கியோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்டு 5 வரை நடைபெற உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் மொபைல் போன் மூலம் படம் எடுத்துக் கொள்ளும் செல்ஃபி தளங்களை முக்கிய இடங்களில் அமைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் ஒலிம்பிக் 400 மீட்டர் தடகள தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்க மதுரை ரயில்வே ஊழியர் ரேவதி வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் ரயில்வே துறையில் இருந்து பல்வேறு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதால் ரயில் நிலையங்களில் இதுபோன்ற செல்பி தளங்கள் நிறுவப்பட இருக்கின்றது.
இதனிடையே மதுரை ரயில் நிலையத்தில் வைக்கப்பட இருக்கும் செல்பி தளத்தை ரயில்வே அலுவலகத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின் தொடங்கி வைத்தார்.
இந்த செல்பி தளங்களில் ரயில் பயணிகள் தங்களது தனி படங்களை எடுத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் #Cheer4India குறியீடுடன் வெளியிட்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.