விவாகரத்து பதிவை நீக்கிய நடிகை சமந்தா..மீண்டும் காதல் கணவருடன் இணையப்போகிறாரா? ரசிகர்கள் குழப்பம்
விவாகரத்து தொடர்பான பதிவை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரும் பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார்.
இதனிடையே சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர்.
தங்கள் இன்ஸ்டாகிராம் பதிவில்,
"நீண்ட ஆலோசனைக்கு பிறகு, எங்கள் சொந்த பாதையை தொடர நானும், சைதன்யாவும் பிரிகிறோம்.
10 ஆண்டுகளுக்கும் மேலான நட்பைப் பெற்றிருந்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம், அது எங்கள் உறவின் முக்கிய அம்சமாக இருந்தது.
எப்போதும் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பு பிணைப்பை வைத்திருக்கும் என நம்புகிறோம்” என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த செய்தி இருவரின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே பிரிவு என்பது பரவாயில்லை. ஏற்றுக் கொள்ளக்கூடியது தான்.
அவரவர்களின் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே. அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சிறந்த முடிவாக இருக்கும் என நாக சைதன்யா சமீபத்தில் கூறினார்.
மேலும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தா தான் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த விவாகரத்து தொடர்பான பதிவை தற்போது நீக்கியுள்ளார். இதனால் இருவரும் மீண்டும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.