"கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே" - கைவிடப்பட்ட பச்சிளங்குழந்தை, இரவு முழுவதும் பாதுகாத்த நாய்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் தொப்புள் கொடியுடன் கைவிடப்பட்ட பச்சிளங்குழந்தையை, இரவு முழுவதும் நாய்க்குட்டிகளும், அதன் தாய் நாயும் பாதுகாத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ளது முருங்கேலி மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது சரிஸ்டல் கிராமம். இந்த கிராமத்தில் நேற்று காலை வழக்கம்போல அந்த பகுதி மக்கள் தங்களது பணியைத் தொடங்கியுள்ளனர்.
அப்போது, அந்த கிராமத்தில் அமைந்துள்ள சாலையின் ஓரத்தில் இருந்த வைக்கோல் புதரில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.
உடனே வைக்கோல் புதர் அருகே சென்று பார்த்தபோது அங்கே பச்சிளங்குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் அழுதுகொண்டு இருந்தது.
வைக்கோல் புதருக்குள் பச்சிளங்குழந்தை அழுத நிலையில் இருப்பதை கண்ட மக்களுக்கு, அவர்கள் கண்ட இன்னொரு காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பிறந்து தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் கைவிடப்பட்ட இந்த பச்சிளம் பெண் குழந்தையை, அதே வைக்கோல் புதரை சுற்றியிருந்த நாய்க்குட்டிகளும், அதன் தாய் நாயும் இரவு முழுவதும் பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளது.
மக்கள் பார்க்கும்போது அந்த பச்சிளங்குழந்தையை சுற்றி நாய்க்குட்டிகள் சுற்றி பாதுகாப்பாக படுத்திருந்தன. பின்னர், அந்த பகுதி மக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், அந்த குழந்தையை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இரவு முழுவதும் கடும் குளிரானால் அவதிப்பட்டு வந்த அந்த பச்சிளங்குழந்தையை நாய்க்குட்டிகளும், நாயும் பாதுகாத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாநிலத்தில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி திபான்சா கப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த டுவிட்டர் இப்போது வைரலாகி வருகிறது.