தஞ்சை தேர் விபத்து - திமுக சார்பில் ₹2 லட்சம் நிவாரணம்
தஞ்சை தேர் விபத்தில் பலியான குடும்பத்திற்கு திமுக சார்பில் ₹2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
94 வது அப்பர் குரு பூஜை திருவிழா தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில் தொடங்கியது. திருவிழாவின் ஒரு பகுதியாக தேரோட்டம் நடைபெற்றது. தேரில் பழமையான அப்பர் படம் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதே போல தேரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேர் ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவிலை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது திருப்பம் ஒன்றில் தேர் திரும்பும் போது தான் அந்த விபரீத நிகழ்வு நடந்தது.
திருப்பத்தில் தேர் வேகமாக திரும்பும் போது அதன் உச்சி பகுதி மேலே சென்று கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்தது. தேருக்குள் இருந்தவர்கள் மின்சாரம் தாக்கி அலறினர்.அதே நேரம் தேருக்கு அருகே இருந்தவர்களையும் மின்சாரம் தாக்கியது.
[இதை கண்ட பொதுமக்கள் தேரை நோக்கி அச்சத்துடன் ஓடி வந்தனர்.ஆனால் மின்சாரம் பாய்ந்தது குறித்து சிலர் எச்சரித்ததால் ஓடி வந்தவர்கள் அப்படியே பயந்து நின்று விட்டனர். இதனால் மேலும் அதிக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.எனினும் உயிர் மின் அழுத்த கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் தேர் தீ பிடித்த எரிந்தது.
இந்த தேர் விபத்தில் மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இயற்கைக்கு மாறான இறப்பு என தஞ்சை கள்ளபெரம்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்விபத்தில் பலியான குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ 2 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 25,000 நிவாரணமாக வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்