"பா.ஜ.க.வை கடலில் எறிய வேண்டும்..நம் பிரதமர் குறுகிய பார்வை கொண்டவர்” - தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்
பா.ஜ.க.வை தூக்கி வங்கக்கடலில் எறிய வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் 2022-2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமன் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சந்திரசேகர ராவ், பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து அகற்றி வங்கக் கடலில் தூக்கி எறிய வேண்டும்.
நாங்கள் பா.ஜ.க என்ன செய்தாலும் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்க மாட்டோம். நாட்டுக்கு எது நல்லதோ, எது தேவையோ, அதை கண்டிப்பாக செய்வோம்.
இது ஜனநாயக நாடு. நம் பிரதமர் குறுகிய பார்வை கொண்டவராக இருக்கிறார். இந்த நாட்டில் தலைமையை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் மும்பைக்கு சென்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவை சந்தித்து பேசப்போகிறேன்.
நான் இந்த தேசத்தை நம்புகிறேன். நம் தேசத்திற்கு எதாவது தேவையென்றால் அது எதிர்வினையாற்றும். இப்போது மாற்றத்திற்கான தேவை வந்திருக்கிறது. நம் நாட்டிற்கு ஒரு புரட்சி தேவையாக இருக்கிறது.
நாம் சண்டையிட்டால் தான் மாற்றத்தை காண முடியும். சிங்கப்பூர் அரசிடம் எதுவும் இல்லை ஆனால் மூளை இருக்கிறது. நம் அரசிடம் எல்லாம் இருந்தும் மூளை மட்டும் இல்லை.
நாம் அரசியலமைப்பு சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். இந்தியாவில் பட்டியலனத்தவர்களும், பழங்குடியினரும் புறக்கணிக்கப்படுகின்றனர். பா.ஜ.க அரசு மக்களை மோசமாக ஏமாற்றுகிறது” என சந்திரசேகர ராவ் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.