பெருமைக்காக உயிர் பலியா ? கூட்டத்தில் பலியாகும் மக்கள் - ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. எதிர்க்கட்சியாக தெலங்குதேசம் கட்சி உள்ளது.
2024ஆம் நாடாளுமன்ற தேர்தலுடன் அங்கு சட்டமன்ற பொதுத்தேர்தலும் நடைபெறவுள்ளது. எனவே, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த வேலைகளை செய்து வருகிறார்.
சந்திரபாபு நாயுடு அறிவிப்பு :
இந்த தேர்தல் தான் தனது கடைசி தேர்தல் எனவும், இதில் தோல்வி அடைந்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என பகீரங்கமாக அறிவித்துள்ளார் சந்திரபாபு நாயுடு.
கூட்டத்தில் உயிரிழப்பு :
இந்நிலையில், ஆளும் கட்சியை குறிவைத்து 'நமது மாநிலத்திற்கு ஏன் இப்படிப்பட்ட தலை எழுத்து' என்ற பெயரில் அவர் மாநிலம் தழுவிய பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். நேற்று குண்டூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிலையில், அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே சில நாள்களுக்கு முன்னர் நெல்லூரில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடுவின் பொதுக்கூட்டத்தில் சிக்கி பெண் உள்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.