கர்ப்பிணி பெண்ணின் செயினை பறிக்க சாலையில் தரதரவென்று இழுத்துச் சென்ற கொடூர திருடன்!
கர்ப்பிணி பெண் என்று கூட பார்க்காமல் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற திருடர்கள் சாலையில் அப்பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற சிசிடிவி வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று எட்டு மாத கர்ப்பிணியான கீதா (24) காலை 7:30 மணியளவில் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு விநாயகர் சன்னதிக்கு சென்றுள்ளார். கோவிலில் பூஜை செய்து விட்டு திரும்பி வந்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரண்டு ஆண்கள் பைக்கில் வந்துள்ளனர். உடனே ஒருவர் பைக்கிலிருந்து இறங்கி கீதாவிடம் சென்று அவர் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயற்சி செய்துள்ளார்.
அந்த தங்கச் சங்கிலி திருடன் கையில் சிக்கவில்லை. உடனே அந்த நபரை தடுக்க முயற்சிக்கிறார் கீதா. அந்த நபர் கீதாவை தரதரவென்று சாலையில் இழுத்துச் செல்கிறார். கீதா உதவிக்காக சத்தம் போட்ட பிறகு, அக்கம்பக்கத்தினர் அவரை நோக்கி விரைந்து ஓடி வருகின்றனர்.
மக்கள் வருவதை பார்த்த திருடர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிடுகின்றனர். அங்கு வந்த பொதுமக்கள் அருகில் இருந்த கடையில் கீதாவை சிறிது நேரத்திற்கு அமர வைத்து, கீதாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் கொடுக்கின்றனர்.
திருடன் செயின் பறித்ததில் கீதாவின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டதால், முதலுதவிக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து கீதாவின் கணவர் ராமச்சந்திரன், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை பதிவு செய்த போலீசார் திருடனில் ஒருவனை கைது செய்துள்ளனர்.
இது குறித்து காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கவுதமி கூறுகையில், ஒருவரை நாங்கள் கைது செய்துவிட்டோம். மற்றொருவரை தேடி வருகிறோம். இவர்கள் இருவரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.