வேகம் எடுக்கும் குரங்கு அம்மை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!
உலக நாடுகளைக் கடந்த சில மாதங்களாக அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை இதுவரை இந்தியாவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளுக்குக் கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள் தகவல் தர வேண்டும் என பொதுச் சுகாதாரத்துறை கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று அனைத்து விமான நிலையங்களுக்கும் புதிய உத்தரவு ஒன்றை பொதுச் சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி," குரங்கு அம்மை பாதிப்பு என சந்தேகத்திற்கிடமானவர்களை தனிமைப்படுத்திட வேண்டும். குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் ஏதேனும் பயணிகளுக்கு இருப்பதாக சந்தேகம் இருந்தால் அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்" எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், குரங்கு அம்மையை கட்டுப்படுத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
“குரங்கு அம்மையால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அதற்கான முழு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.
கண் எரிச்சல், கண் வலி, பார்வை மங்குதல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “குரங்கு அம்மை பாதித்தவர்களையும், மொத்தமாக பாதித்த இடங்களையும் விரைவாக அடையாளம் காண வேண்டும். தொற்று மேற்கொண்டு பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும்.
அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணிக்க வேண்டும். குரங்கு அம்மை என சந்தேகத்திற்குரிய மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி, உறுதி செய்ய வேண்டும். குரங்கு அம்மை பாதித்தவரின் தொடர்பில் இருந்தவர்களை தொற்று அறிகுறி ஏற்பட்டதில் இருந்து 21 நாட்களுக்கு நாள்தோறும் கண்காணிக்க வேண்டும்.
நோயாளிகளுக்கும், வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள் நன்றாக கைகளின் சுத்தத்தை பராமரிக்க வேண்டும். முழு கவச உடை அணிய வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல், “குரங்கு அம்மை பாதித்த நாடுகளுக்கு சென்று வந்து அறிகுறிகளுடன் காணப்படும் நோயாளிகளை எல்லா மருத்துவமனைகளும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். மாநில அளவில் அரசுகள் கண்காணிப்பு மையத்தை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும்.
மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டாலும் அது எப்படி பரவியது, நோயால் பாதிக்கப்பட்டவர் எங்கிருந்து வந்தார் என்ற தகவலை உடனடியாக சேகரிக்க வேண்டும். மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.