அரசு பள்ளி To சந்திரயான் 3 திட்ட இயக்குநர் - வீரமுத்துவேலுக்கு 'விஞ்ஞான் பிரதீபா' விருது!
சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு விஞ்ஞான் பிரதீபா விருது வழங்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
இதைத் தொடர்ந்து பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி 6:04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி சரித்திர சாதனை படைத்தது இஸ்ரோ. நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.
அதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் பல ஆய்வுகளையும் மேற்கொண்டது. அதில் ஆக்ஸிஜன், மாங்கனீஸ், சிலிகான், இரும்பு, கால்சியம், சல்பர் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இது தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தனர்.
வீரமுத்துவேலுக்கு விருது
இஸ்ரோவின் இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் சந்திரயான் 3யின் திட்ட இயக்குநராக பணியாற்றிய தமிழகம், விழுப்புரம் மாவட்டத்த்தை சேர்ந்த வீர முத்துவேலுக்கு மத்திய அரசு 'விஞ்ஞான் பிரதீபா' விருது வழங்கி கௌரவித்துள்ளது.
போபாலில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் விஞ்ஞான பாரத் ஏற்பாடு செய்த அறிவியல் கண்காட்சியில் விஞ்ஞானி வீர முத்து வேலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து அரசு பள்ளியில் பயின்று நிலவை தொட்டு உலகப் புகழ் அடைந்த ஒரு தமிழ் விஞ்ஞானிக்கு நாட்டின் மிக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்று பலரும் வீரமுத்துவேலை பாராட்டி வருகின்றனர்.