பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்க ஒன்றிய அரசு கடிதம் - தவெக அரசுக்கு முதல் சோதனை
பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்க ஒன்றிய அரசு, கடிதம் எழுதியுள்ள நிலையில் விஜய் தலைமையிலான தவெக அரசு எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிஎம் ஸ்ரீ திட்டம்
தேசிய கல்விக்கொள்கை 2020 இன் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்ட பிஎம் ஸ்ரீ (PM SHRI) திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 14,500 பள்ளிகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இத்திட்டத்திற்கான மொத்த செலவில் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் ஏற்கும்.
அதேவேளையில் இந்த திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் மும்மொழி கொள்கை (Three-Language Policy) கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பது ஒன்றிய அரசின் கொள்கை ஆகும்.
இந்த திட்டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் இணைந்துள்ள நிலையில், முந்தைய ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தாங்கள் இருமொழி கொள்கையை பின்பற்றி வருவதாகவும், மும்மொழி கொள்கை மாநில நலனுக்கு எதிரானது என கூறி, இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது.
இதன் காரணமாக, தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய சுமார் ரூ.3,500 கோடி நிதியை மத்திய அரசு வழங்காமல் நிறுத்தியது.
தவெக எப்படி எதிர்கொள்ளும்?
தற்போது மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் ஆட்சி மற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) உடனடியாகக் கையெழுத்திடுமாறு வலியுறுத்தி மத்திய அரசு தமிழக மற்றும் மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

நாளை விஜய் தலைமையிலான தவெக அரசு தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில், இந்த திட்டத்தை எவ்வாறு எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசுக்கு அடிபணிந்து திட்டத்தை அப்படியே ஏற்குமா அல்லது மும்மொழி கொள்கைக்கு விலக்கு கேட்டு திட்டத்தை ஏற்குமா அல்லது கையெழுத்திட மறுத்து தமிழ்நாடு அரசுக்கான புதிய கல்விக்கொள்கையை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பில் தமிழ்நாடு மக்கள் உள்ளனர்.