டெல்லியில் விவசாயிகள் வெளியேற வலியுறுத்தி சிங்கு பகுதி மக்கள் திடீர் போராட்டம்- பதற்றம் அதிகரிப்பு
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் சிங்கு எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 26ம் தேதியன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் வெடித்தது.
இதனையடுத்து, சிங்கு பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் நேற்று ஒன்று திரண்டு தேசியக் கொடியுடன் ஊர்வலமாக வந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக உள்ளூர் மக்கள் நடமாட இடையூறு ஏற்படுவதாகவும், அப்பகுதி கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கு உள்ளூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
சிங்கு பகுதியை விட்டு விவசாயிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டபடி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். உள்ளூர் மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் சிங்கு பகுதியில் நேற்று பதற்றம் ஏற்பட்டது. சிங்கு பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.