வெடித்து சிதறிய பட்டாசுகள் -இடிந்து விழுந்த போலீஸ் ஸ்டேஷனின் முன்பகுதி
கன்னியாகுமரியில் காவல் நிலையத்தில் யாரும் எதிர்பாராத வெடி விபத்து நிகழ்ந்ததில் காவல் நிலைய கண்ணாடி மற்றும் நிழல் கூடம் எரிந்து நாசமானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த சட்ட விரோத விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நாட்டு பட்டாசுகளை பறிமுதல் செய்வதோடு விற்பனை செய்பவர்களையும் வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தக்கலை பகுதியில் கழிந்த 2-வருடங்களுக்கு மேலாக சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட நாட்டு பட்டாசுகளை பறிமுதல் செய்த தக்கலை போலீசார் அந்த பட்டாசுகளை காவல் நிலைய மேல் மாடியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று காலை அந்த பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் காவல் நிலைய முன்பக்க கண்ணாடிகள் மற்றும் விசாரணைக்கு வரும் பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கூரையால் ஆன நிழல் கூடமும் எரிந்து நாசமானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை தீயணைப்பு துறையினர், தீ பரவாமல் அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது
காவல் நிலையத்தில் அதிக சத்தத்துடன் நிகழ்ந்த வெடி விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.