மதுரை ஆதினத்தை கொல்ல சதி முயற்சியா? சிசிடிவி காட்சியில் அம்பலமான உண்மை

Tamil nadu Viral Video Tamil Nadu Police
By Karthikraja May 04, 2025 01:19 PM GMT
Report

 தன்னை கொல்ல சதி முயற்சி நடந்ததாக மதுரை ஆதினம் தெரிவித்த குற்றச்சாட்டிற்கு காவல்துறை விளக்கமளித்துள்ளது.

மதுரை ஆதினம்

சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. 

அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு

இதில் பாஜக தலைவர்ஜெ.பி.நட்டா, ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதுரை ஆதினம் வந்த போது, உளுந்தூர்பேட்டை அருகே அவரின் கார் விபத்தை சந்தித்தாக கூறப்படுகிறது.

கொலை முயற்சி?

இது தொடர்பாக அந்த நிகழ்வில் பேசிய மதுரை ஆதினம், கார் விபத்து ஏற்படுத்தி தன்னை கொலை செய்ய சதி நடப்பதாகவும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆசியால் தான் பிழைத்தேன் என மதுரை ஆதினம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

மதுரை ஆதீனம்

மேலும், "குல்லா அணிந்து, தாடி வைத்திருந்தவர்கள் அந்த காரில் இருந்ததாகவும், இது தொடர்பாக புகார் அளிக்கவில்லை. அரசு சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கே சலுகை வழங்குகிறது. நான் புகார் அளித்தால் ஏற்க மாட்டார்கள்" என செய்தியாளர்களிடம் கூறினார்.

காவல்துறை விளக்கம்

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள கள்ளக்குறிச்சி காவல்துறையினர், "சிசிடிவி காட்சிகள் வைத்து நடத்தப்ப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இந்த விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து" என தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், "மதுரை ஆதீன மடாதிபதி 02/05/2025 அன்று சென்னைக்கு TN 64 U 4005 FORTUNER என்ற பதிவண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது உளுந்தூர்ப்பேட்டை சேலம் ரவுண்டானா அருகே மற்றொரு வாகனத்தின் மீது இடித்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் இரண்டு தரப்பினரும் சென்றுவிட்டனர்.

சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில் மேற்படி மதுரை ஆதீனத்தின் வாகனம் அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்வதற்கு பதிலாக, அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக சேலம் ரவுண்டானா அருகே உளுந்தூர்ப்பேட்டை மார்க்கத்தில் அதிவேகமாக வந்துகொண்டிருந்த போது சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக சேலம் ரவுண்டானா முன்பு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை கடந்து மெதுவாக வந்துகொண்டிருந்த MARUTHI SUZUKI என்ற வாகனத்தின் மீது காலை சுமார் 09.45 மணியளவில் பக்கவாட்டில் உரசியதில் மேற்படி மாருதி வாகனத்தின் முன்பகுதியிலும் FORTUNER வாகனத்தின் இடது பின்பக்கத்திலும் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு, இரு தரப்பிலும் சுமார் 10 மணியளவில் அந்த இடத்திலிருந்து சென்று விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனத்தை கொலை செய்ய முயற்சி செய்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. மதுரை ஆதீனம் அவர்களே தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக கூறி வருகிறார். 

மதுரை ஆதீனம்

முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. மேற்படி விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த FORTUNER வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து எனத் தெரிகிறது. CCTV பதிவுகளை ஆய்வு செய்ததில் மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாக சென்று இவ்விபத்தினை ஏறடுத்தியதாக தெரிகிறது.

மேலும் இச்சம்பவம் சம்பந்தமாக மதுரை ஆதீனமோ அவர்களைச் சார்ந்தவர்களோ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எந்தவித புகாரும் கொடுக்கவில்லை. பொய்யான தகவல்களை சமூக வலைதளத்தில் பகிரும் நபர்கள் மீது சட்டப்படு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.