தேசிய பங்கு சந்தையை ஆட்டிப்படைத்த இமயமலை சாமியார் இவரா... போட்டுடைத்த சிபிஐ
தேசிய பங்கு சந்தை மோசடியில் சிக்கிய இமயமலை சாமியார் யார் என சிபிஐ தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இருந்த சித்ரா ராமகிருஷ்ணா அதன்பின் சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் பதவி வகித்தபோது தேசிய பங்குச் சந்தையில் நிதி தொடர்பான முடிவுகள், நியமனங்கள் தொடர்பாக எழுந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இமய மலையில் உள்ள சாமியார் ஒருவரின் ஆலோசனையின்படி என்எஸ்இ தொடர்பான முடிவுகளை சித்ரா ராமகிருஷ்ணா எடுத்ததாகவும், அவரிடம் என்எஸ்இ.யின் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
மேலும் சித்ரா ராமகிருஷ்ணா முன்னாள் சிஓஓ ஆனந்த் சுப்ரமணியன், ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் யார் அந்த இமயமலை சாமியார்? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த இமயமலை சாமியார் எனவும், சாமியார் போல் நடித்த அவரிடம் தெரிந்தே சித்ரா ராமகிருஷ்ணன் பல ரகசிய தகவல்களை பகிர்ந்துள்ளதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் சிபிஐ தெரிவித்துள்ளது.