பூனைக்கு இப்படி ஒரு பாசமா? - நெகிழ்ந்து போன தமிழக மக்கள்

villupuram cat meet owner
By Petchi Avudaiappan Jan 08, 2022 10:38 PM GMT
Report

விழுப்புரத்தில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் விடப்பட்ட பூனை வளர்த்தவரை தேடி மீண்டும் வந்த சம்பவம் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக  நம்மில் பலரும் வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது மட்டுமின்றி அவற்றின் பெயர்களை குடும்ப அட்டைகளில் சேர்க்காத குறையாக குடும்ப உறுப்பினர்களாக பாவிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்போம். எடுத்துக்காட்டாக  மதுரை, தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாங்கள் வளர்க்கும் பூனை, நாய்க்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே  விழுப்புரம் சோழன் தெருவைச் சேர்ந்த கென்னடி என்பவரின் வீட்டிற்கு இரு வருடங்களுக்கு முன்பு அடைக்கலம் தேடி பூனை ஒன்று வந்துள்ளது. அந்த பூனைக்கு புசி என பெயர் வைத்து கென்னடி பாசமாக வளர்த்துள்ளார். ஆனால், சில மாதங்களுக்கு பிறகு அந்த பூனையை வெளியில் அனுப்பியுள்ளார்.

மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்த பூனையின் சேட்டைகளை தாங்க முடியாத அக்கம்பக்கத்தினர் புகார் அளிக்க ஆரம்பித்தார்கள். இதனால், வருத்தமடைந்த கென்னடி அதனை இரண்டு வாரங்களுக்கு முன்பு 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தளவானூர் என்ற கிராமத்தில் அந்தப் பூனையை விட்டுவிட்டு வந்து விட்டார். ஆசை ஆசையாக வளர்த்த பூனையை விட்டு விட்டோமே என்ற வேதனை கென்னடியை வாட்டியுள்ளது.

அதன்பிறகு வருத்தம் தாங்க முடியாமல் கென்னடி விட்ட இடத்திற்கு சென்று தேடியுள்ளார். ஆனால், பூனை கிடைக்கவில்லை. பின்னர், சோகத்துடன் வீடு திரும்பினார். அதன் பிறகு மறுநாள் காலையில் வீட்டைத் திறந்து பார்க்கையில், அவருடைய புசி வீட்டு வாசலில் கிடந்ததை பார்த்து மகிழ்ச்சியின் சந்தோஷத்தில் உரைந்துபோய் கண்களில் ஆனந்த கண்ணீர் மல்க பூனையை அணைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அக்கம்பக்கத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.