சாதி அரசியல் உருவாக திமுகவே காரணம்...அண்ணாமலை..!!
தமிழகத்தில் திமுக கட்சிக்கு ஆட்சிக்கு வந்த பிறகு தான் சாதி அரசியல் உருவானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கூட்டத்தில் உள்ள இந்து அறநிலைய துறை அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய தமிழகத்தின் பாஜக கட்சி மாநில தலைவர் அண்ணாமலை ஆளும் திமுக அரசை கண்டித்து தங்களது கண்டனங்களை தெரிவித்தார். சனாதன தர்மம் பிற மதங்களுக்கு எப்போதும் எதிரானது அல்ல, பெண்கள் உடன்கட்டை ஏறுவதையும் சனாதன தர்மம் கூறியது அல்ல என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கடவுளை நம்பாதவர்கள் கடவுளை நம்புபவர்களை பற்றி தவறாக பேசக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இன்றளவும் சனாதனம் என்றால், பிராமணர்களின் ஆதிக்கம் போன்றவற்றையே பேசி 70 ஆண்டுகளை திமுகவினர் கடத்தி வருகின்றனர் என சாடிய அண்ணாமலை, சனாதன தர்மத்தில் கோட்பாடு கிடையாது என்றும், அதில் இருக்கும் சிறு சிறு குறைபாடுகளையும் மனிதர்களே கொண்டு வந்தனர் என சுட்டிக்காட்டினார்.
சாதி அரசியல் - திமுகவே காரணம்
இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்துக்களை கொச்சை படுத்துவீர்கள் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதலாம் ஆண்டில் சனாதன தர்மத்தை எதிர்ப்போம் என்றும், இரண்டாவது ஆண்டில் வேரறுப்போம் என்றும், மூன்றாவது ஆண்டில் முழுவதுமாக வேரறுப்போம் என்றும் நான்காவது ஆண்டில் கட்சியில் 90% இந்துக்கள் என்றும் ஐந்தாவது ஆண்டில் வீரவேல் வெற்றிவேல் என கூறுவார்கள் என சாடினார்.
மேலும், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு தான் மாநிலத்தில் சாதி அரசியல் உருவானது என கூறி, நிறைய கலவரங்களும் சண்டைகளும் ஏற்பட திமுகவே காரணம் என கூறினார். இதற்கிடையில், அறநிலைய துறை அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட பாஜகவை சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.