பூஜை செய்யக்கூடாது என ஆபாச மிரட்டல் - ஜெ தீபா மீது பூசாரி பரபரப்பு புகார்
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் பூஜை செய்யவிடாமல் கொலை மிரட்டல் விடுப்பதாக ஜெ தீபா மீது பூசாரி புகார் அளித்துள்ளார்.
பூசாரி புகார்
சென்னை தியாகராயநகர் அருளாம்பாள் தெருவை சேர்ந்தவர் கோவில் பூசாரி ஹரிஹரன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், போயஸ் தோட்டத்தில் அமைந்திருக்கும் ஜெயா டிவி கட்டிட காம்பவுண்ட அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் தான் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் தினமும் பூஜை செய்து வருவதாக குறிப்பிட்டு, இந்நிலையில் ஆக 15 காலை 8.30 மணியளவில் வழக்கம் போல் தான் கோவிலில் பூஜை செய்ய சென்ற போது, அங்கு வந்த ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் உட்பட 50 பேர் தன்னை பூஜை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர் என புகார் அளித்துள்ளார்.
பாதுகாப்பு வேண்டும்
மேலும், ஜெ.தீபா, தன்னிடம் யார் பூஜை செய்ய விட்டது? என தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்றார் என்றும், அப்போது தடுக்க வந்த காவலர் ஒருவரையும் அவர்கள் தகாத வார்த்தையால் திட்டினார் என்றும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இனி இந்த கோவிலில் பூஜை செய்ய வந்தால் தன்னை கொலை செய்து விடுவோம் என ஜெ.தீபா, மாதவன் உட்பட பலரும் மிரட்டினார்கள் என்ற காரணத்தால், கோவிலில் தொடர்ந்து பூஜை செய்ய தனக்கு அனுமதி அளித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் புகார் அளித்திருக்கிறார்.