சென்னை மின்சார ரயில் விபத்து : ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரயில் நடைமேடை மீதி ஏறியதால் விபத்து ஏற்பட்டது.
நேற்று பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த போது இந்த விபத்து நடைபெற்றது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயிலின் பிரேக் பிடிக்காமல் போனதால் தடம்புரண்ட மின்சார ரயில், ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் உள்ள தண்டவாளத்தில் இருந்து நடைமேடை மீது ஏறியதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.
Train on the platform in Chennai,
— Balasubramani க.பாலசுப்ரமணி (@balasubramanikk) April 24, 2022
Minor injury to train driver in crash@GMSRailway #ChennaiLocalTrain @News18TamilNadu pic.twitter.com/QGQBOK7CRS
இதனால் முதல் பெட்டி பாதிக்கு மேல் நடைமேடை மீதி ஏறியதில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதேச்சமயம் ரயிலில் வேறு எவரும் இல்லாததால் உயிர் சேதவும் ஏற்படவில்லை. இதனையடுத்து காயமுற்ற ரயில் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ரயில்வே பாதுகாப்பு அதிகாரி, ரயில் ஓட்டுநர் பிரேக் பிடிக்காததே விபத்துக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். ஓட்டுநர் பத்திரமாக இருக்கிறார். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.
அதனால் ஒரு பெரிய விபத்து ஒன்றும் இல்லை. இருந்தாலும், ஓட்டுநரின் கவனக்குறைவினால் பிரேக் பிடிக்காததால், ரெயில் நடைமேடையில் ஏறி சுவரில் மோதி நின்றுள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில், மின்சார ரயில் விபத்து ஏற்பட்டது தொடர்பாக ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,இந்திய தண்டனை சட்டம் 279,ரயில்வே சட்டப்பிரிவு 151 மற்றும் 154 ஆகிய பிரிவுகளின் கீழ் ரயில் ஓட்டுனர் மீது எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.