தேர்தல் நடத்தை விதி மீறல்; பிரேமலதா விஜயகாந்த் மீது அதிரடி வழக்கு பதிவு!
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரேமலதா விஜயகாந்த்
சென்னையில் கோயம்பேட்டில் அமைந்திருக்கும் தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மகளிர் தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கலந்துகொண்ட எம்ராய்டிங் தையல் பயிற்சி நிபுணரான சரண்யா விஜய் என்பவர் 6 மாத இலவச பயிற்சி வழங்குவதாக கடந்த மாதம் அறித்தார். பயிற்சி முடித்தவர்களுக்கு இலவச சான்றிதழை வழங்கினார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் 300 பெண்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு சிஎம்பிடி காவல் நிலையத்தில் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் போலீசார் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
வழக்கு பதிவு
இதற்கிடையில், அனுமதியின்றி இந்நிகழ்ச்சி நடைபெற்றதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விழா ஏற்பாட்டாளரிடம் அனுமதி இல்லாமல் எப்படி நடத்தலாம் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு தேமுதிகவினர், நிகழ்ச்சி எங்கள் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் பாதிப்பும் ஏற்படாது எனக்கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனால், இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் ஆகியோர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கோரி தேர்தல் அதிகாரி சத்யநாராயணன் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.