கட்டுப்பாட்டை இழந்த கார்.. நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய வேன் - துடிதுடித்து 4 பேர் பலி!
தேவகோட்டை அருகே டெம்போ வேன் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை
மலேசிய நாட்டிலிருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 12 பேர் இராமேசுவரத்தில் இருந்து திருச்சிக்கு இன்று சென்றனர். வேனை மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் கந்தையா (40) ஓட்டி வந்துள்ளார்.
அதேபோல், தஞ்சாவூரைச் சேர்ந்த பவுல் டேனியல் (38), என்பவர் அவரது மகள்கள் சூசன் ரெகுமா (10), ஹெலன் சாமா (7), சித்தப்பா மைக்கேல் (63) ஆகியோர் உறவினர் வீட்டு விசேஷத்துக்காக காரில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆண்டா ஊரணிக்கு வந்தனர்.
அப்போது பவுல் டேனியல் ஓட்டி வந்த கார் தேவகோட்டை அருகே மார்க்கண்டேயன் பட்டி விலக்கு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் மதியம் 12.30 மணி அளவில் எதிரே வந்த டெம்போ வேன் மீது நேருக்கு நேர் மோதியது.
உயிரிழந்த கொடூரம்
இந்த கோரச் சம்பவத்தில் காரில் இருந்த 4 பேர், வேன் ஓட்டுநர் மற்றும் மலேசியச் சுற்றுலாப் பயணிகள் 10 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தைக் கண்ட கிராம மக்கள், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி காரில் பயணித்த பவுல் டேனியல் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தேவகோட்டை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உறவினர் வீட்டு விசேஷத்துக்காகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.