கார் மோதி விபத்து; காங்கிரஸ் மாவட்ட தலைவர் பரிதாப பலி - கே.எஸ். அழகிரி இரங்கல்!
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அளாவூர் நாகராஜ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பலி
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலரும் ஆவார் அளாவூர் நாகராஜ் (57). இவர் சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில் சாலையோர தள்ளுவண்டி டிபன் கடையில் நேற்று இரவு உணவருந்தி கொண்டிருந்தார்.
அப்போது அதே கடையில் உணவருந்திய வேறொரு நபர் காரை இயக்கியபோது விபத்து ஏற்பட்டது, கார் மோதியதில் நாகராஜ் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கே.எஸ். அழகிரி
இரங்கல் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும்போது, உணவகத்தில் உணவு அருந்திவிட்டு சாலை அருகில் நின்றுகொண்டிருந்த காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு அளவூர் வி. நாகராஜ் அவர்கள் எதிர்பாராத விதமாக கார் மோதியதில் காலமான செய்தி கேட்டு அளவற்ற அதிர்ச்சியும், துயரவும் அடைந்தேன்.
ஐந்து மணி நேரம் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த அவர் அரங்கத்தின் கீழே அமர்ந்திருந்ததை பார்த்து மேடையில் வந்து அமருங்கள் என்று கூறினேன். அதற்கு பிறகு அன்று இரவே விபத்தில் காலமான செய்தி எனது நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. இழக்கக் கூடாத ஒருவரை இழந்து விட்டோம்.
காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும், குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சிகளை மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வந்த ஒரு செயல் வீரராக அவர் திகழ்ந்தார். திரு அளவூர் நாகராஜ் அவர்களது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.