நாடாளுமன்றம் அருகே கார் குண்டு வெடிப்பு : பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தான் நாடாளுமன்றன் அருகே நடத்தப்பட்ட கார்குண்டு வெடிப்பு தாக்குதல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அந்த நாட்டின் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. அதன் அருகில் அரசின் பிற உயர் அலுவலகங்களும் உள்ளன. நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் காவல்துறையின்தலைமையகம் உள்ளது.
வெடித்த குண்டு
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஒரு பெண் உள்பட 2 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் வேகமாக ஓட்டி சென்றனர்.

அந்த கார் போலீஸ் தலைமையகத்தை நெருங்கியபோது போலீசார் வழக்கமான சோதனைக்காக காரை தடுத்து நிறுத்தினர். அப்போது பயங்கரவாதிகள் காரில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.
தாலிபன் பொறுப்பேற்பு
பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. கார் குண்டு வெடிப்பில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இருவரும், போலீஸ் அதிகாரி ஒருவரும் உடல் சிதறி பலியாகினர்.
மேலும் 4 போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நாடாளுமன்றத்துக்கு அருகில் நடத்தப்பட்ட இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.