கார் டயர் வெடித்து பயங்கர விபத்து - கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் மரணம் - பரபரப்பு சம்பவம்
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியராக பணிபுரிந்து வருபவர் ராஜாமணி. இவரும், இவரது கணவர், ராஜாமணியின் உதவியாளர் ஆகியோர் ஆதி திருவரங்கம் கோவிலுக்கு காரில் சென்றனர். டிரைவர் நசீம்பாருக் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், சங்கராபுரம் வட்டாட்சியர் பேருந்து நிறுத்தம் அருகே கார் சென்றுக்கொண்டிருந்த போது, காரின் முன்பக்க டயர் வெடித்தது. வேகமாக சென்றுக்கொண்டிருந்த கார், டயர் வெடித்ததால் அங்கிருந்த கம்பத்தின் மீது கார் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தனித்துணை ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் கம்பத்தின் மீது மோதியபோது, சாலையில் நடந்து சென்ற 5 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. 11 வயது கோபிகா என்ற சிறுமி சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
மேலும், பலத்த காயமடைந்த விக்னேஷ், கிரிஜா,பழனியம்மாள், விக்ரம், சிந்து ஆகிய 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து சங்கராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவிலுக்கு சென்ற மாவட்ட சமூக தனித்துணை ஆட்சியரின் கார் டயர் வெடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.