இந்திய அணியை வழிநடத்த சரியான ஆள் பாண்டியா தான் : முன்னாள் வீரர் புகழாரம்
இந்திய அணிக்கு ஒருவேளை கேப்டன் தேவைப்பட்டால் ஹர்திக் பாண்டியாவை நியமிக்கலாம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 15வது சீசன், கொரோனா விதிமுறைகள் காரணமாக, மொத்த போட்டிகளும் மும்பை ஆடுகளங்களில் வைத்து நடத்தப்பட்டன
இந்த நிலையில் அறிமுகமான முதல் தொடரிலேயே குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக இந்த தொடரின் மூலம் கேப்டனாக அறிமுகமான ஹர்திக் பாண்டியா கேப்டனாக தனது முதல் தொடரிலேயே குறையே சொல்ல முடியாத அளவிற்கு செயல்பட்டு குஜராத் அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்துள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் வியந்து பாராட்டி பேசி வருகின்றனர்.
அந்தவகையில் சர்ச்சைக்கு பெயர் போன இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவை பாராட்டி பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டைட்டில் பட்டத்தை வெற்றிபெற்ற குஜராத் அணிக்கு வாழ்த்துக்கள், ஒருவேளை வரும் இரண்டு வருடங்களில் இந்திய அணிக்கு கேப்டன் தேவைப்பட்டால் நான் முதலில் பார்ப்பது பழைய ஹர்த்திக் பாண்டியாவைதான்” என்று மனதார பாராட்டியுள்ளார்.
இவருடைய பாராட்டை தொடர்ந்து பலரும் இந்திய அணியின் அடுத்த லிமிடெட் ஓவர் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்கலாம் என்று அறிவுரை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது