“மதத்தை விட உயிர் முக்கியம்” - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 10 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு பண்டிகைகளை வீட்டில் வைத்து கொண்டாட மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளது.
அதேசமயம் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யவும், விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து வழிபடவும் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இல. கணபதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத உரிமைகளை விட வாழ்வதற்கான உரிமை முக்கியமானது என நீதிபதிகள் கூறினர்.
மேலும் பொதுநலன் கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.