குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்கள் தங்கள் விவரங்களை 26ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் தேர்தல் ஆணையம் தகவல்
குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்கள் குறித்த விவரங்களை மார்ச் 26ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு - குற்றப் பின்னணியைக் கொண்ட வேட்பாளா்கள் வாக்குப் பதிவுக்கு முன்பாக மூன்று முறை அதுகுறித்த விவரங்களை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும்.
முதல் முறையாக மார்ச் 23 முதல் 26ம் தேதிக்குள்ளாகவும், இரண்டாவது முறையாக மார்ச் 27 முதல் 30ம் தேதி வரையிலும், மார்ச் 31 முதல் ஏப்ரல் 4 வரையிலும் என மொத்தம் மூன்று தடவைகள் குற்றப் பின்னணி விவரங்களை வெளியிட வேண்டும்.

இதற்கென படிவம் சி1 இருக்கிறது. இந்தப் படிவத்தில், நிலுவையில் உள்ள வழக்கு விவரம், எந்த நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றன. குறைந்தபட்சமாக விதிக்கப்பட்ட தண்டனை விவரம் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயம்.
இந்தப் படிவத்தை பூா்த்தி செய்து அதனை அப்படியே பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். இதுகுறித்த விவரத்தை தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.