2050ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகும்- WHO எச்சரிக்கை
2050ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய புற்றுநோய் பாதிப்புகள் இருமடங்காக அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
புற்றுநோய் பாதிப்பு
ஆண்டுதோறும் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சுமார் 3.5 கோடியாக அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
புகையிலை பயன்பாடு, உடல் பருமன், உடற்பயிற்சி இல்லாமை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், காற்று மாசுபாடு மற்றும் புகைபிடித்தல் ஆகியவை புற்றுநோய்க்கான முக்கிய காரணங்கள் என்று சொல்லப்படுகிறது.

தற்போது, உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 1 கோடி நபர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.
இதய நோய்களுக்கு அடுத்தபடியாக அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாகவும் புற்றுநோய் உள்ளது.
இதுகுறித்து அப்பல்லோ அதீனா மகளிர் புற்றுநோய் மையத்தின் மார்பக புற்றுநோய் பிரிவு தலைவர் டாக்டர் புவன் சுக் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது..,
பல நோயாளிகளுக்கு புற்றுநோய் முற்றிய நிலையில்தான் கண்டறியப்படுகிறது.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய பரிசோதனைகளை வலுப்படுத்த வேண்டும்.
மார்பக, கருப்பை வாய், வாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களுக்கான பரிசோதனைகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும்.
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதை விட, அதைத் தடுப்பதே சிறந்த வழியாகும்.

HPVக்கு எதிரான தடுப்பூசி கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க உதவும். அதேபோல் ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி கல்லீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும்.
நோய் கண்டறிந்தவுடன் அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.
காப்பீட்டு வசதிகள், அரசின் ஆதரவு மற்றும் குறைந்த விலை மருந்துகள் நோயாளிகளின் உயிர்வாழும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.