ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட ஆம்புலன்ஸ் பேருந்துகள் உருவாக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் தலைமையில் மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டன.
அதன்படி போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொள்ள மதுரை வந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், “மாவட்டந்தோறும் ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட ஆம்புலன்ஸ் பேருந்துகள் இயக்க முதல்வர் மற்றும் சுகாதார மந்திரியிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.
நாளை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளேன். மகளிர்க்கு இலவச பேருந்து பயண திட்டம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.
மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து முன்களப் பணியாளர்களுக்குப் பேருந்துகள் இயக்குவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கை நிறைவேற்றியப் பிறகு, 1 லட்சத்து 22 ஆயிரம் தொழிலாளர்களும், 20 ஆயிரம் பேருந்துகளும் இருக்கக் கூடிய போக்குவரத்து துறையை சீரமைக்கும் பணிகள் துவங்கப்படும்.
மாவட்டந்தோறும் தேவைப்பட்டால், முதல்வர் மற்றும் சுகாதார மந்திரிகளின் ஆலோசனைப் படி, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கலந்துபேசி, ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட ஆம்புலன்ஸ் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.