தஞ்சாவூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
தஞ்சாவூர் பேருந்து விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற தனியார் பேருந்து, வரகூர் கிராமத்திற்கு வந்தபோது சாலையின் ஓரம் இருந்த மின்கம்பி மீது உரசி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 10 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் பேருந்தின் படிகட்டில் நின்று கொண்டு கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்ததால் மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பேருந்தில் பயணித்த 48 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், பேருந்து விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலாரூ.25 ஆயிரமும் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.